தமிழ் நாட்டைப்பொறுத்தவரை
1993ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோள் ஒளிபரப்பில் தனியார் நிறுவனங்கள் இறங்கியபிறகு சிறுகதை,
தொடர்கதை, குறு நாவல், நாவல் போன்றவற்றை குறைந்து கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. இப்போது
அச்சு ஊடகமாக வெளிவரும் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் கூட பல்வேறு அரசியல் நிகழ்வுகள்,
சிறப்புக்கட்டுரை என்ற அளவில்தான் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றன. இதைப் பற்றி விவாதித்தால்
வாசகர்கள் விரும்புவதில்லை. அதனால் கதைகளுக்கான ஒதுக்கீட்டை குறைத்துவிட்டோம் என்பதுதான்
பத்திரிகைகளின் பதிலாக இருக்கிறது.
பல பத்திரிகைகள் சிறுகதைகள்
பிரசுரம் செய்வதையே நிறுத்திவிட்ட நிலையில் கல்கி, தினமணி, தினமலர் போன்ற பிரபல இதழ்களும்
சில பல சிற்றிதழ்கள், அமைப்புகளும் இன்னும் சிறுகதைப்போட்டிகளை அறிவித்து பல புதிய
எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வர காரணமாக இருக்கின்றன.
2017ல் தினமலர் வாரமலர்
(திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம் பதிப்புகள்) நடத்திய போட்டியில் நான் கலந்துகொள்ளவில்லை.
நான் ஏற்கனவே 2003ல் ஆறுதல் பரிசும், 2010ல் இரண்டாம் பரிசும் பெற்றிருக்கிறேன். தினமலர்
மதுரை, சென்னை, கோவை, புதுச்சேரி பதிப்பில் 2007ஆம் ஆண்டு ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறேன்.
சில ஆண்டுகளாக நான் எழுதுவதில் சரிவர கவனம் செலுத்தாததால் என்னுடைய படைப்புகளில் தேக்க
நிலை ஏற்பட்டிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது. அதனால் இந்த ஆண்டு கலந்துகொள்ள தோன்றவில்லை.
கடந்த 01.10.2017ல் தினமலர்-வாரமலர்
சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியிருந்தது. ஆறுதல் பரிசு விபரத்தில்
திருவாரூரை சேர்ந்த சுப ஸ்ரீவெங்கடேஸ்வரன், இந்திரா பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும்,
விளமல் முகவரியை சேர்ந்த லதா சங்கரலிங்கம் ஆக திருவாரூரைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றியாளர்களாக
தேர்வு செய்யப்பட்டுள்ள விபரம் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
ஒரு சிறுகதை பரிசுக்குரியதாக
தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த எழுத்தாளர்கள் அத்துடன் தேங்கி விடாமல் தொடர்ந்து எழுதி
சிறப்பிடம் பெற வாழ்த்துகள்.
நான் எழுதியவற்றில் ஆறு
சிறுகதைகளை மட்டும் தொகுத்து மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். அதை இங்கு இலவசமாக பதிவிறக்கம்செய்து அனைவரும் படிக்கலாம், பகிரலாம்.
No comments:
Post a Comment