Pages

Share

Thursday 26 October 2017

சிங்கிளா டிராவல் பண்ணினா எவ்வளவு அக்கப்போர் என்று இப்போதும் தனியாக பயணம்

2010ஆம் ஆண்டில் சீசன் இல்லாத நேரத்தில் குற்றாலம் சென்றபோது வழியில் எனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களை அப்போது வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன். இப்போது அவற்றை நான் பேசி வீடியோவாக பதிவிட்டிருக்கிறேன்...

கண்ணா... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்... இந்த மாதிரி டயலாக் எல்லாம் சினிமாவுக்கு ஓ.கே... ஆனா சிங்கிளா டிராவல் பண்ணினா எவ்வளவு அக்கப்போர் என்று இப்போதும் தனியாக பயணம் செய்து அவதிப்படுபவர்களுக்கு தெரியும். தனியா போனா யாரும் அடிக்க மாட்டாங்க... உதைக்க மாட்டாங்க... ஆனா "எக்ஸ்க்யூஸ்மீ... சாரி ஃபார்த டிஸ்டபன்ஸ்... கொஞ்சம் மாறி உட்காருரீங்களா?" இப்படி சிலர் கேட்பாங்க. இது முதல் ரகம்.

இன்னும் சிலர் "எல்லாரும் இப்படி தனித்தனியா உட்கார்ந்துகிட்டா நாங்க எங்கதான் உட்காருறது... மாறி உட்காருங்க" என்று அதிகார தோரணையுடன் சொல்வார்கள்... லக்கேஜ் அதிகமா இருக்கும்போது பரவாயில்லை. கையில ஒரு சின்ன பை தவிர வேற எதுவும் இல்லாதப்ப கூட இப்படித்தான் நடந்துக்குவாங்க. (நானெல்லாம் லக்கேஜ் அதிகமா இல்லாத நேரத்துல இப்படி சேர்ந்துதான் உட்காரணும்னு அடம் பிடிக்கிறதில்லை.)

நாம் அப்படியே பார்வையை ஓட்டினோம் என்றால் இரண்டு மூன்று இடங்களில் பெண்கள் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாக இருக்கும். அங்க அவர் மனைவியை உட்கார சொல்லிட்டு, இவர் நம்ம பக்கத்துல உட்காரலாம். ஆனா செய்ய மாட்டாங்க. திருமணம் செய்யும்போது எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்போம்னு புரியாத பாஷையில புரோகிதர் சொல்லிக்கொடுத்த சங்கல்பத்தை பிரிக்க வந்த ஆளாவே நம்மள பார்ப்பாங்க. இது ரெண்டாவது ரகம்.

இன்னும் சிலர் இருப்பாங்க. நேரே கண்டக்டர்கிட்ட போய், "சார்... நான் நாகர்கோவில் போறேன்... கோயம்புத்தூர் போறேன்... அவ்வளவுதூரமெல்லாம் தனித்தனியா உட்கார்ந்து போக முடியாது என்று முறைப்பார்கள். உடனே கண்டக்டர் வந்து  பார்த்து தனியாக இருக்கும் பாச்சுலர்சைதான் நகர்த்த பார்ப்பார்.

Sunday 22 October 2017

மெர்சல் படத்தின் கதை பழைய படங்களை நினைவுபடுத்துகிறதா

மெர்சல் படத்தின் கதை விஜயேந்திர பிரசாத் (இயக்குனர் ராஜமௌலியின் அப்பா) என்று சொன்னார்களே... ஆனா பழைய படங்களை நினைவுபடுத்துகிறதே... நீ என்ன சொல்ல வர்ற? இந்த கதை காப்பியா, இல்லையா என்று கேட்பது புரிகிறது.

படம் பார்க்குறவங்களுக்கு நான் சொல்றது சின்ன விஷயம்தான்.

பம்மல் கே.சம்மந்தம் படத்துல கமல் அடிக்கடி சொல்ற டயலாக்: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

இந்த வசனத்தை ரசிகர்களை நோக்கி சொல்லவேண்டும் என்றால் படம் எடுப்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.

இயக்குனர் விக்ரமன் "நான் பேச நினைப்பதெல்லாம்" அப்படின்னு ஒரு புத்தகத்துல, ரசிகன் ஒருபடத்தை முழுசா பார்த்துட்டு வந்து, ஆயிரம் குறை சொல்லலாம். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சியிலேயே நெளியக்கூடாதுன்னு சொல்லியிருப்பார். இதை மனதில் கொண்டால் நல்லது.

எப்படி கதை எழுதுவது என்ற கேள்வி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விடை முழுவதுமாக கண்டறியாமலேயே இருக்க சாத்தியம் இருப்பதாகத்தான் தெரிகிறது.
****************


கே டிவி, சமூக வலைதளங்களைப் பார்த்தே படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை அட்லீ விதைத்திருக்கிறார் என்று முகநூலில் ஒரு பதிவு பார்த்தேன். இது மாதிரி சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பிறகு பார்ப்போம்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு பேட்டியில், எல்லா எழுத்தாளர்களுமே ஒரே கதையத்தான் திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். உடனே, நான் எழுதியிருக்கும் பெரும்பாலான கதைகளை மனதில் ஓட்டிப்பார்த்தேன். அட... ஆமா, நாம கூட பெரும்பாலான கதைகளில் ஒரே கருவைத்தான் அடிப்படையா வெச்சிருக்கோம்னு தோணுச்சு.

ஏன் இப்படி எழுதிகிட்டு இருக்கோம்னு யோசிச்சா இந்த ஒரு கருவை வெச்சு ஒரு கதையிலயே முழுசா எல்லாத்தையும் சொல்ல முடியாது. இன்னும் ஆயிரம் கோணங்களில் ஐயாயிரம் சிறுகதைகள் கூட எழுத முடியும் என்று என்னையறியாமல் என் ஆழ்மனது நம்பிக்கொண்டிருப்பது புரிந்தது.

எழுத்து துறையில் ஜாம்பவான்கள் பலரும் கூட இந்த மன எண்ணத்தில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சுஜாதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சுஜாதா எழுதிய ஆரியபட்டா என்ற நாவலைப் படித்தேன். நூலின் முன்னுரையில், தமிழில் எழுதப்பட்ட இந்த நாவலை திரைக்கதையாக மாற்றி கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், சௌந்தர்யா நடித்து வெளிவந்ததாம். தமிழில் எழுதிய கதையும் கல்கி வார இதழில் 1998ல் தொடர்கதையாக வெளிவந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

நல்ல திறமைசாலியான விஞ்ஞானி பல வகையிலும் அவமானப்படுத்தப்படுகிறார். அவரது கண்டுபிடிப்புகளுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பாராட்டைக்கூட அடுத்தவர் தட்டிக்கொண்டு சென்று விடுவதால் கோபம் எல்லை மீறிப்போய் நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாத கும்பலுக்கு விலைபோய் விடுகிறார். உண்மை தெரிந்ததும் விஞ்ஞானியின் மனைவியே நாட்டைக்காப்பாற்ற வேண்டி கணவனை சுட்டுக்கொன்று விடுகிறார்.

இந்த ஒன் லைனை படிப்பவர்களுக்கு சிவாஜிகணேசன் நடித்த அந்த நாள் படமே நினைவுக்கு வரலாம். அந்த படமே ரோஷமான் என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்வார்கள்.

ஆரியபட்டா நாவல் திருமகள் நிலையம் 2000ல் நூலாக வெளியிட்டு 2013ல் நாலாம் பதிப்பு வெளிவந்துள்ளது. 150 பக்கம். சுமார் 130 பக்கங்களுக்கு பிறகுதான் கொலை செய்தவர் விஞ்ஞானியின் மனைவிதான் என்ற உண்மை வாசகர்களுக்கு புரியவந்தது. இன்னும் சிலருக்கு, கொலை நடந்த நேரத்தில் அவரது மனைவி வெளியூரில் இருப்பதாக சொல்லப்பட்டதுமே அவர்தான் கொலையாளி என்று யூகித்திருப்பார்கள். நான் கொஞ்சம் லேட்.

(சர்க்கரை)ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதான் சர்க்கரை என்று சொல்வார்கள். உலகம் முழுவதும் உள்ள படைப்புகள் இணைய உதவியினால் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விடுவதால் காப்பி, தழுவல் எல்லாம் முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு விடுகின்றன.

சினிமா ரசிகர்கள் எல்லாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். நான் பார்த்த சில படங்களை வைத்து என்னுடைய பார்வையை சொல்கிறேன்.

80கள் முதல் வெளிவந்த ரஜினிகாந்த் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்... பணக்கார நண்பனால் அவமானப்படுத்தப்படுவார். அல்லது அங்கே வேலைக்காரனாக இருப்பார். கடைசியில் பார்த்தால் அந்த சொத்து முழுவதற்கும் அவர்தான் சொந்தக்காரனாக இருப்பார்.

விஜயகாந்த் படங்களை எடுத்துக்கொண்டால் நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் அவரது கதாபாத்திரங்களின் முக்கிய வேலையாக இருக்கும்.

இயக்குனர்களை எடுத்துக்கொண்டாலும் இப்படி நிறைய சொல்லலாம். விக்ரமனை எடுத்துக்கொண்டால் ரொம்ப நல்லவங்க, குடும்பம், நட்புக்காக நம்ப முடியாத அளவுக்கு தியாகம் செய்யுவாங்க.

ஆர்.கே.செல்வமணியை எடுத்துக்கிட்டா அவ்வப்போது நாட்டை உலுக்கிய செய்திகள்தான் அவர் படங்களுக்கு ஒன் லைன் ஆக இருக்கும். (புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், குற்றப்பத்திரிக்கை இன்னும் பல.)

பொதுவா ஹீரோ சாதாரண ஆளா இருந்து மன பலம், உடல் பலத்தால் மட்டுமே சர்வ சக்தி படைச்ச வில்லனை எதிர்க்குற மாதிரி படம் எடுத்துகிட்டிருந்தாங்க. ரஜினியின் பல படங்களில் கூட இதுதான் கதையா இருக்கும். ஆனா விஷாலை எடுத்துக்குங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் மேல் அவருக்கு என்ன பிரியமோ தெரியல. செல்லமே படத்துல இன்கம்டாக்ஸ் ஆபீசரா (அதாவது கதா நாயகனுக்கு வலுவான பின்புலம் இருப்பதாக) வருவார். சண்டக்கோழி உள்பட பல படங்களில் வில்லன் இவரை விட பலம் குறைஞ்சவனாவே இருப்பாங்க.

சுந்தர்.சி படத்தை எடுத்துக்கிட்டா எல்லா படங்களிலும் உருட்டுக்கட்டையால் ஒருத்தர் மண்டையில இன்னொருத்தர் 'டொம் டொம்' என்று அடிக்கும் காட்சிகள் கன்ஃபர்ம்.

இப்படி எந்த படைப்பாளியை எடுத்துகிட்டாலும் ஏதோ ஒரு அடிப்படை விஷயம் அவருடைய எல்லா படைப்புகளிலும் தொடருவதை காணலாம்.

பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அப்படின்னு இயக்குனர் பேர் வரும்போது, புத்தகத்துல எழுதுனா அது கதை. படமா எடுத்தா திரைக்கதைன்னு நான் சின்ன புள்ளையா இருக்குறப்ப நினைச்சுக்குவேன்.

ஒரே கதையை எப்படி சொல்றோம்னுங்குற திறமையினால பல விதமா சுவாரஸ்யமா சொல்ல முடியும். அதுதான் திரைக்கதை அமைக்கும் விதம்.

இசையைப்பொறுத்தவரை ச ரி க ம ப த நி அப்படின்னு ஏழு ஸ்வரம்தான். அதை எப்படி பயன்படுத்துறோம்னுங்குறதை பொறுத்துதான் இசை ரசிகனை கவரும்னு சொல்லுவாங்க.

கதைகளும் அப்படித்தான். கதைகளின் மொத்த வகையே சில பிரிவுகள்தான். திரைக்கதை அமைக்கும் சாமர்த்தியத்தில்தான் எல்லாம் இருக்கிறது என்று உலகம் முழுவதும் நம்புகிறார்கள்.

இப்போது ரசிகர்கள் என்பவர்கள் இயக்குனர், ஹீரோ, கதாசிரியர்களை விட அதிகமா படிக்கிறாங்க, உலகப்படம் பார்க்குறாங்கன்னு உண்மை புரிந்தவர்கள் படம் பார்க்கும்போது ரசிகனுக்கு போரடிக்குற காட்சிகளை வெச்சு, இந்த சீன் 1936லயே வந்துடுச்சுன்னு ஸ்டேட்டஸ் போட வைக்க மாட்டாங்க. படம் எடுப்பவர்கள் அதிகமாகவே மாத்தி யோசிக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.

Friday 20 October 2017

முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, அரசு அலுவலக ஊழியர்களில் சிலரும் இப்படி ஏமாற்றலாம்...

நமக்கு போன் செய்யும் மர்ம நபர் நம்மிடமே ஆதார் எண், அலைபேசி எண் அது இது என்று எதையாவது கேட்டு அதன் மூலம் அக்கவுண்ட்டில் உள்ள மொத்த பணத்தையும் ஸ்வாஹா செய்யும் போக்கு அடிக்கடி நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படித்தவர்கள், உலகம் தெரிந்தவர்கள் கூட அவர்களை அறியாமல் ஏமாந்துவிடுவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

எனக்கு இப்படி எல்லாம் போன் வராது. ஏன்னா, சிலிண்டர் மானியம்னு அக்கவுண்ட்ல ஏறும் சொற்ப தொகையும் வங்கி அபராதம் என்று துடைக்கப்பட்டுவிடும்போது முகம் தெரியாத ஃப்ராடுகள் எடுக்குறதுக்கு பணம் எங்க இருக்கும். அதனால நான் எப்பவும் எஸ்கேப்தான்.

நண்பர் ஒருவர் குடும்பஸ்தர். வருமானத்துக்கு சிரமமாக இருக்கிறது என்று செய்து வந்த தொழிலை மனைவியை கவனிக்க சொல்லிவிட்டு சென்னையில் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட்டதாக சொன்னார்.

இது என்ன புது கதையா இருக்கு...

கோட்டையும் இல்ல... கொடியும் இல்ல... அப்பவும் நான் ராஜான்னுங்குறது மாதிரி, ஒரு இண்டர்வியூ இல்ல, அப்ளிகேஷன் போட்டதா தெரியல... அப்புறம் எப்படி வேலைன்னு கேட்டேன்.

தெரிஞ்சவங்க மூலமா வேலைக்கு சேர்ந்துருக்கேன். ரெண்டு வருஷம் முடிஞ்சதும் நிரந்தரமாக்கிடுவாங்களாம் என்றார்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள்ல நிர்வாகம் ரேட் பேசி வாங்கிட்டு போஸ்டிங் போடுறது வழக்கம். சில அரசு அலுவலங்கள்ல அவ்வப்போது காலிப்பணியிடம் எப்படி நிரப்புறாங்கன்னு யாருக்கும் தெரியாத ரகசிய பட்டியல்ல இருக்கும். ஆனா நீ சொல்றத பார்த்தா, அவங்க வேலை நெருக்கடி முடிஞ்சதும், இவ்வளவு நாள் என் கைப் பணத்துல இருந்துதான் சம்பளம் கொடுத்தேன். எங்களால தாக்குப்பிடிக்க முடியாது. கஷ்டப்பட்டும் நாங்களே இனி இந்த வேலைய பார்த்துக்குறோம்... சாரி தம்பின்னு உன்னைய வெளியில அனுப்பிட்டு உன்னை மாதிரி அடுத்த அடிமையை அடுத்த வருஷம் தேடிக்குவாங்க என்று எச்சரித்தேன்.

அப்படி எல்லாம் இல்ல நண்பா. எனக்கு சம்பளம் கவர்மெண்ட் கிட்ட இருந்துதான் வருதாம்.

எவ்வளவு வந்துச்சு...

இன்னும் ஒரு மாசம் ஆகலை...

சரி... வாங்கினதும் சொல்லு.
******
தீபாவளிக்கு ஊருக்கு வந்திருப்பானே என்று போன் செய்தேன்.

நீ சொன்னது சரிதான். இன்னும் கவர்மெண்ட்ல இருந்து ஆர்டர் வரலை. என் பணத்தைதான் தர்றேன் என்று சொல்லி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாராம் அந்த அலுவலர். சென்னையில் 1 1/2 மாதம் தங்கி வேலை பார்த்தவனுக்கு கிடைத்த தொகை இது.

காலங்கள் மாறும்...
கோலங்கள் மாறும்...
காட்சியின் கருத்து மட்டும் மாறாதோ....

--------------------------------------------------------------------------------------------
இனி தொடர்வது பழைய பதிவில் ஒரு பகுதி...

சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம சாப்பிட மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

Image Credit: womenseducationproject.org
அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான். பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

முதன் முதலில் இந்த பதிவு எழுதப்பட்டது - 25-மார்ச்-2010

Thursday 19 October 2017

ரசிகர்கள் மொக்க என்று திட்டும் படத்தை கூட கஷ்டப்பட்டுத்தானே எடுத்திருப்பார்கள்?

காலங்கள் மாறும்...
கோலங்கள் மாறும்...
காட்சிகள் எதுவும் மாறாதோ...

ஏன்னா 2012ல் எழுதுன இந்த பதிவுல தொகையை மட்டும் மாத்திகிட்டு படிச்சா வருஷ வித்தியாசமே தெரியாது போலிருக்கே...

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற அழுத்தமான படங்களைக் கொடுத்த இயக்குனர் மகேந்திரன், தன்னுடைய ஒரு புத்தகத்தில், ''எப்படி படம் எடுத்தாலும் அதற்கு ஒரே உழைப்புதான். அப்புறம் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு திரைக்கதையில் சொதப்பி ரசிகர்களையும் ஏமாற்ற வேண்டும். எல்லாமே நல்ல படங்களாக எடுத்துவிடவேண்டியதுதானே'' என்று குறிப்பிட்டிருந்தார்.
(2012ல் வெளியான இந்த பதிவுக்கு அப்போது வைத்த தலைப்பு: சகுனி - ரோட்டோர மோட்டல்கள் - ஓர் ஒப்பீடு)

எவ்வளவோ பேர் வாய்ப்பு கிடைக்காமல் அழுத்தமான, அதிரடியான கதைகளுடன் சுற்றிக்கொண்டிக்கும்போது கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பவர்களை என்ன சொல்லலாம்?

விவேக் இண்டர்வியூவிற்காக திருவான்மியூர் செல்லும்போது டேக் டைவர்ஷன் என்று ஆளாளுக்கு திருப்பி விட்டே அவரை திருப்பதிக்கு அனுப்பிவிடுவார்கள்.

அதே போல் இந்தப் படத்தின் இயக்குனரும் நல்ல கதை, திரைக்கதையுடன் தான் வந்திருப்பார் என்பது என் யூகம். தமிழ் சினிமாவின் சாபக்கேடு அவரையும் விடுமா? எத்தனை பேர் அவரது திரைக்கதையை படித்து டேக் டைவர்ஷன் என்று ரிவிட் அடித்தார்களோ?

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு குறும்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். போலீசாக வேண்டும் என்ற கனவுடன் பள்ளியில் படிக்கும் சிறுவன் அவன் குடும்ப சூழ் நிலை காரணமாக வீட்டு வேலைக்கு செல்வான். அங்கே அந்த வீட்டு முதலாளியம்மாவால் அவன் திருடனாவதுதான் கதை.

21 காட்சிகள்தான். அதையே எங்களால் நினைத்தபடி எடுக்கமுடியவில்லை. காரணம் பைனான்ஸ். பணப் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு காட்சியிலும் காம்ப்ரமைஸ் செய்து செய்து எப்படியோ எடுத்து முடித்தோம். அவ்வளவு சிக்கல்களுக்கு காரணம், குறும்படத்தை அப்போது மார்க்கெட்டிங் செய்வது ரொம்பவே சிரமம்.(இப்போதும் சில விதிவிலக்குகள்தான் உண்டே தவிர, வேறு ஒன்றும் பெரிய மாற்றமில்லை).

ஆனால் சகுனி, 3 போன்ற படக்குழுவினருக்கெல்லாம் என்ன குறை? அது சரி. காரணம் கேட்டால், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்... இல்ல... ஒவ்வொரு சிரமம்னு ஒரு கதையை சொல்லுவாங்க.

கடைசியா முட்டாளா ஆகுறது யார் தெரியுமா? ரசிகன்தான். படம் தேறாதுன்னு தெரிஞ்சுதானோ என்னவோ 1150 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியிருக்காங்க. இப்படி ரிலீசாகுற படங்களோட மவுத் டாக், அல்லது விமர்சனம் படித்து படம் பப்படம்னு (சுஜாதா உபயம்) தெரிஞ்சுக்குறதுக்குள்ள லாபமே பார்த்துடுறாங்க.

தேசிய நெடுஞ்சாலைகள்ல இருக்குற மோட்டல்கள்ல 5 ரூபா பொருளுக்கு 20 ரூபாய் விலையை சர்வ சாதாரணமா சொல்லுவாங்க. ஏன்னு கேட்டா உருட்டுக்கட்டை அடி இலவசம். சமீப காலமா படங்கள் வெளிவர்றதைப் பார்த்தா இந்த மோட்டல் நிர்வாகத்துக்கும் சினிமா வியாபாரத்துக்கும் அடிப்படை தத்துவத்துல பெரிய வித்தியாசமே இல்லை.

5 கோடிரூபாய் கூட வசூல் செய்யாத அளவுக்கு திரைக்கதை அமைச்சு உருவாக்கியிருக்குற படத்தைப் பத்தி இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருக்கு நல்லா தெரிஞ்சுருந்தும் விஷயம் புரியாம வந்து சிக்குற வினியோகஸ்தர்கள் தலையில 20 கோடி ரூபாய்க்கு வித்துடுவாங்க.

இந்த வினியோகஸ்தரும் விவரம் புரியாம வர்றதில்லை. இளிச்சவாய் ரசிகர் ஏமாந்தா 40 கோடி ரூபா வசூலாயிடாதான்னு நப்பாசை. இப்படி ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ஒவ்வொருத்தரோட பேராசைதான் நஷ்டத்தை கொடுக்குது. இதுல யாரை குறை சொல்றது.

ஏதோ ஒரு விமர்சனத்துல படிச்சேன். ஏன் ஓடுச்சுன்னு தெரியாம கலகலப்பு ஓடுன அளவுக்கு கூட இது ஓடாதுன்னு எழுதியிருந்தாங்க.

ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். கலகலப்பு சாதாரண நடிகர்கள், (அதிக ஸ்டார் வேல்யூன்னா அந்த படத்துல அஞ்சலியை சொல்லலாம்.) ஜாலி காமெடின்னு 2 கோடியில படமெடுத்து 3 கோடிக்கு வித்துருப்பாங்கன்னு வெச்சுப்போம். (யாரும் புள்ளி விவரத்தோட வந்துடாதீங்கப்பா...ஒரு உதாரணத்துக்குதான் சொன்னேன்.) இந்தப்படம் பெரிய அளவுல யாரையும் ஏமாத்தியிருக்கப்போறது இல்லை.

ஆனா சகுனி, 3 மாதிரியான படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மண்ணைக்கவ்வுறதுனால எவ்வளவு பேருக்கு பண நஷ்டம். நான் சாதாரண ரசிகர்களை சொன்னேன். இந்த 150 ரூபா டிக்கட் பலருக்கு ஒரு நாள் சம்பளமா கூட இருக்கலாம். (ஒரு நாள் சம்பளத்தை அப்படியே படம் பார்க்க செலவழிக்க நினைச்சதுக்கு இன்னும் மோசமான மொக்கை படமா எடுத்து உடுங்க. படம் பார்க்குற ஆள் நாக்கை புடுங்கிட்டு சாகட்டும்)

ஜாகிர்கான் (ஐபிஎல் நடந்ததால லேட்டஸ்ட்டா இந்தியா டீம்ல ஆடுன பௌலர் பேர் கூட மறந்துடுச்சு. சாரி) ரன் ஏதும் எடுக்காம அவுட் ஆனா பல நேரத்துல பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அவர் விக்கெட்டை எடுத்து சமாளிச்சுடுவார்னு வெச்சுக்குவோம். கவுதம் கம்பீர், சுரேஷ்ரெய்னா, வீரேந்தர் சேவாக் மாதிரி ஆளுங்க ஓப்பனிங் இறங்கி வாத்து முட்டை போட்டா எவ்வளவு கோபம் வருது (ஏமாந்த ரசிகனுக்கு).

அதேமாதிரிதான். நல்ல ஸ்டார் வேல்யூவோட எக்கச்சக்கமா எதிர்பார்த்து போய் படம் பார்க்க உட்காந்ததும் இப்ப கூட டிவியில அடிக்கடி பார்க்குற 10 வருஷத்துக்கு முந்தைய படம் நினைவுக்கு வந்தா கோபம் வருமா வராதா?

நல்ல தரமான சேவையை கொடுத்து வாடிக்கையாளரை திருப்தி படுத்தி நாமும் நிறைய லாபம் சம்பாதிக்கணும்னு நினைக்குறதுதான் நல்ல வியாபாரத்துக்கு அழகு.

அதை விட்டுட்டு மோட்டல்கள், பஸ் ஸ்டாண்ட் கடைகள்ல செய்யுற மாதிரி மனோபாவத்தோட, படம் எப்படி இருந்தா என்ன, இளிச்சவாய் ரசிகர்கள் ரெண்டு நாள்ல முண்டியடிச்சுகிட்டு படம் பார்த்த பிறகு அது நல்லா இருந்தா என்ன இல்லாட்டி என்ன என்ற மனோபாவத்துடன் இருந்தா ஒரு நாள் இன்னொரு விஷயம் நடந்துடும். 

அதாவது, இவய்ங்க இப்படித்தான் பில்ட்அப் குடுப்பாய்ங்க மாப்ளே. ரெண்டு நாள் ஆகட்டும் பார்க்கலாம்னு பேச ஆரம்பிச்சா இப்படி 1000 ரூபாய்க்கு பில்ட் அப்  பண்ணிட்டு 100 ரூபாய்க்கு படமெடுக்குறவங்களுக்கெல்லாம் ஆப்புதான்.

அப்படி எல்லாம் நடந்துடுமா? எப்படி நடக்கும். நம்ம நாட்டு வாக்காளர்களும், ரசிகர்களும் முழிச்சுகிட்டதா சரித்திரமே இல்லையே. இதை நம்பிதானே பலருக்கு இங்க பிழைப்பு ஓடுது.

ஆனா என்னால ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம் இருக்குங்க. மொக்க படம்னு முதல்லேயே தெரிஞ்சுட்டா மூணாவது நாளே படம் பார்க்க ஒருத்தன் கூட வரமாட்டான்னு தெரிஞ்சுகிட்டு ஒரே நேரத்துல ஆயிரம் ரெண்டாயிரம்னு அதிக எண்ணிக்கையில தியேட்டரை புடிச்சு ரிலீஸ் பண்றதுக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க பாருங்க...

''திருட்டு விசிடியில படம் பார்த்துட்டா தியேட்டருக்கு வரமாட்டாங்க. அதனாலதான் அதிக தியேட்டர்ல ரிலீஸ் பண்றோம்.'' -தாங்க முடியல சாமி.
***********
காலங்கள் மாறும்...
கோலங்கள் மாறும்...
காட்சிகள் எதுவும் மாறாதோ...

ஏன்னா 2012ல் எழுதுன இந்த பதிவுல தொகையை மட்டும் மாத்திகிட்டு படிச்சா வருஷ வித்தியாசமே தெரியாது போலிருக்கே...

Wednesday 18 October 2017

ஆத்தாடி... மெர்சல் படம் இம்புட்டு தியேட்டர்ல ரிலீசா?

வேலை இல்லாதவன் எதையோ புடிச்சு வெச்சி என்னவோ செய்துகிட்டிருந்தானாம். அந்த கதையா, இன்னைக்கு தினகரன் பேப்பர்ல திருச்சி ஏரியாவுல எத்தனை தியேட்டர்ல ரிலீஸ் என்று பார்த்தேன். ஐம்பதை தாண்டி போய்கிட்டிருந்தது. இன்னும் கூடுதலா இருக்கலாம், ஏன்னா திருச்சி சோனா காம்ப்ளக்ஸ்லயே மூணு ஸ்கிரீன்ல் திரையிடுறதா தினத்தந்தியில விளம்பரம்.

நெட்ல எல்லா ஏரியாவுலயும் மெர்சல் வெளியிடப்படும் தியேட்டர் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தேன்... என்னால எண்ணி சொல்ல முடியாது. குத்து மதிப்பா பார்த்தா தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டரை தாண்டும் போலிருக்கு. (அறு நூறுன்னா எவ்வளவு? அது நூறை எல்லாம் தாண்டி போயிடுச்சுப்பா...)

காலையில் 7 மணிக்கு கடைத்தெரு பக்கம் சென்றேன். திருவாரூர் தைலம்மை தியேட்டரில் (750 இருக்கைகள் இருக்கும். எக்ஸ்ட்ரா சேர் போடுவாங்களா, எத்தனை போடுவாங்கன்னெல்லாம் தெரியாது.) மூணு ஷோவுக்குரிய கூட்டம் வெளியில் நின்றது.

Image Credit : Dinakaran Daily Paper













இனி பிளாஷ்பேக்,
என்னுடைய சின்ன வயசுல பார்த்தா, ரஜினி படத்தோட அம்பதாவது நாள்ல தமிழகம் முழுவதும் எல்லா தியேட்டரோட பட்டியலையும் போடுவாங்க. அப்போ சுமாரா 70 முதல் 80 தியேட்டர் வரும். இப்போ ஒவ்வொரு ஏரியாவுலயும் அந்த எண்ணிக்கையை தொட்டுடும் போலிருக்கு. நாலு நாள் வசூலை சிந்தாம சிதறாம அள்ள முடிவு பண்ணிதான் தீபாவளி மாதிரி பண்டிகைக்கு இப்போ ஒரு பெரிய பட்ஜெட், ரெண்டு அல்லது மூணு சின்ன பட்ஜெட் படங்களுக்கு மேல ரிலீஸ் ஆகுறது இல்லை.

*********************************

இனி... 2016 தீபாவளி அன்று எழுதிய பதிவின் ஒரு பகுதி...

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த ஆடைகளை நாடுபவர்கள் குறைவு என்பதால் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டைலரிடம் கொடுத்து அவர் தீபாவளிக்கு முதல்நாள் டெலிவரி தேதி குறித்துக் கொடுத்த அட்டையுடன் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்பது, அப்பா, அம்மா, மாமா என்று பலரிடமும் போராடி சிறு சிறு அளவில் வெடிகள் வாங்கி அதை காய வைத்து காப்பாற்றி வைத்திருப்பது என்று இன்னும் என்னென்னவோ சம்பவங்கள், நினைவுகளை கண் முன் நிறுத்தும்.

செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் கால கட்டம் தொடங்கிய உடனேயே தீபாவளியின் முகம் மாறிவிட்டது என்று கூறலாம். தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளித்து விட்டு பேருக்கு எதாவது வெடியை கொளுத்தி விட்டு பிறகு கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிய இனிப்பு, கார வகைகளை பேருக்கு டேஸ்ட் பார்த்துவிட்டு தொ(ல்)லைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் மூழ்கத்தொடங்கிவிட்டோம்.

பல ஆண்டுகளாக இருந்த பண்டிகை கொண்டாட்ட முறை மாறிய பிறகு அந்த வடிவமாவது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றால் இணையம், ஸ்மார்ட் போன் ஆகியவை அதற்கு வேலையே வைக்கவில்லை. தினமும் காலை (?!) 4 மணி அல்லது 5 மணிக்கு எழுந்து, ஆறரை அல்லது ஏழு மணிக்குள் ஷேர் ஆட்டோ, பேருந்து, வேலைசெய்யும் நிறுவன பேருந்து, மின்சார ரயில் என்று பிடித்து மேற்பார்வையாளர் அல்லது மேலாளரிடம் திட்டு வாங்காமல் ஆபீசுக்குள் நுழைந்து அரைகுறை சாப்பாட்டுடன் வேலையை பார்த்து, மாலை பணி முடித்து அதே போல் திருவிழா கூட்டத்திற்குள் சிக்கி இரவு 11 மணிக்கு வீடு வந்து சேரும் பாவப்பட்ட வாழ்க்கையை கோடிக்கணக்கான நபர்கள் பெரும் நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அவர்களுக்கு தீபாவளி என்றால் பொழுது விடிந்த பிறகு எழுந்திருப்பது மட்டும்தான் தீபாவளி.

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் பெரு நகரங்கள் என்றில்லை, சின்ன சின்ன கிராமங்களில் கூட அருகிலுள்ள நகரத்திற்கு கடைகளில் விற்பனை, அல்லது உற்பத்தி சார்ந்த வேலைகளுக்கு செல்லும் அனைத்து வயதினருக்கும் இதுதான் நிலை. சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்று ஆபத்தான தொழிலில் இருப்பவர்கள் நிலை இன்னும் சோகம். இது போன்றவர்களும், இருக்க இடம் இன்றி பிளாட்பாரங்களில் வாழ்பவர்களும் தீபாவளி போன்ற பண்டிகையை கொண்டாடுவார்களா? அந்த மன நிலை அவர்களுக்கு இருக்குமா? அவர்கள் அப்படி கொண்டாட ஆசைப்பட்டாலும் பொருளாதாரம் இடம் தருமா என்றெல்லாம் யோசித்தால் மவுனம்தான் பதிலாக இருக்க முடியும்.

பொருளாதார ரீதியில் சிரமப்படுபவர்களை விட்டுவிடுவோம். பண்டிகை கொண்டாடக்கூடிய அளவில் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் நிலை வேறு வகையில் சிதைந்து இருக்கிறது. அதாவது ப்ரீகேஜி, எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு கூட காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ஷெட்யூல் இருக்கிறது. அவர்கள் சாதாரண நாட்களில் வீட்டுக்கு வெளியே விளையாடவே நேரம் கொடுப்பதில்லை. அத்தகைய குழந்தைகளும் தீபாவளி அன்று தொலைக்காட்சி, இணையம், ஸ்மார்ட் போன் என்று மூழ்கி விடுகிறார்கள்.

இன்னும் ஒரே ஒரு வழக்கம் மட்டும் ஓரளவு தமிழ் மக்களிடம் இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தீபாவளி அல்லது அதற்கு அடுத்த நாள் சினிமாவுக்கு செல்லும் வழக்கம்தான் அது.

முன்பெல்லாம் ஏழு அல்லது எட்டு படங்கள் கூட தீபாவளியில் ரிலீஸ் ஆகும். மொத்தத்தில் தமிழகம் முழுவதும் 60 முதல் 80 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலே அதிகம். வீடியோ பைரசி அபாயம் இல்லாமல் இருந்த காலத்தில் பெயிலியரான மொக்க படம் கூட குறைந்த பட்சம் தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் ஓடி லாபம் சம்பாதித்து கொடுத்ததுண்டு. ஆனால் தற்போது முதல் காட்சி ஓடும்போதே படம் ஹிட் அல்லது பிளாப் என்று ரசிகர்கள் இணையத்தில் உளறிக்கொட்டி விடுகிறார்கள். அதனால் தீபாவளிக்கு இரண்டு படங்கள் அல்லது மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி எல்லா தியேட்டர்களிலும் தங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று மறைமுகமாக கட்டாயப்படுத்திவிடுகின்றன.

இது ஒருபுறமிருக்க, இன்னமும் சினிமாவில் கதை நாயகன் செய்யும் சாகசங்களில் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்றாலும், படங்களில் பார்க்கும் சில விசயங்கள் தப்பு. அதை நாம் செய்தால் சக மனிதன் பாதிக்கப்படுவான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் இளைய தலைமுறையினர் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வேலைக்கு சென்று பக்குவப்பட்ட பிறகு தப்பு செய்வதில்லை என்றாலும் இடைப்பட்ட காலத்தில் தடம் மாறும் இளைய தலைமுறையால் சமூகத்தில் பல மனிதர்கள் வெவ்வேறு வகைகளில் பாதிப்பை சந்திக்கிறார்கள்.

உதாரணமாக நாம் ஆசைப்பட்ட பெண் கிடைக்க வில்லை என்றால் காலம் கூடி வரும்போது கண்டிப்பாக திருமணம் நடக்கும், நம் மீதும் நம் குடும்பத்தின் மீதும் அன்பு செலுத்த ஒருத்தி கிடைப்பாள். அவளை நல்லபடியாக வைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு இருப்பதில்லை. கொஞ்சம்பேர்தானே அப்படி இருக்கிறார்கள். அதனால் என்ன என்று விட்டுவிட முடியாது. இந்த சொற்ப சதவீதத்தினர்தான் தன்னை விரும்பாத பெண்ணை கொலை செய்வது, திராவகம் வீசுவது போன்று கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதைப்பற்றி எழுதும் எனக்கே மனம் கலங்குகிறது என்றால் நேரடியாக பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நிலையையும் மன நிலையையும் பற்றி எழுத வார்த்தைகளே வரவில்லை.

1996ஆம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தில் ஒருதலையாக காதலித்த பெண், வேறு ஒருவரை விரும்புவது தெரிந்ததும் பகையாகி கிடக்கும் இரு குடும்பத்தை சேர்த்து வைத்து அந்த காதலர்களையும் இந்த ஒருதலைக்காதலனே சேர்த்து வைப்பதாக கதை இருக்கும். ஆனால் அந்த படத்தில் நடித்த விஜய், 2003ல் திருமலை படத்தில் விருப்பம் இல்லாத ஜோதிகாவை விரட்டி விரட்டி காதலிப்பதாக கதை போகும். படத்தில் ஜோதிகா மீது விஜய் வன்முறையில் இறங்குவதாக காட்சி இல்லை என்றாலும், சில அரைவேக்காட்டு இளைஞர்கள் மனதில், பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றாலும் பந்தாவாக, தைரியமாக ஒருத்தியை விரட்டினால் நாளடைவில் தனக்கு மயங்கிவிடுவாள் என்று முட்டாள்தனமான சிந்தனை விதை விழுந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

1997ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற சூர்ய வம்சம் படத்திலும் படிப்பை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, நீ என் அப்பாவுக்கு எப்பவுமே பிடிச்ச பெண்ணாயிரு. நான் பிடிக்காத பிள்ளையாவே இருந்துடுறேன் என்று பெருந்தன்மையுடன் ஒதுங்கிவிடும் வகையில் சரத்குமார் கேரக்டர் இருக்கும். இது போல் எத்தனையோ நல்ல சினிமாக்களை மேற்கோள் காட்ட முடியும்.

நான் கூறுவது, இந்த மாதிரி தெய்வீகத்தன்மையுடன் இளைஞர்கள் இருக்க வேண்டாம். தன்னை பிடிக்கவில்லை என்று கூறும் பெண்ணை விட்டு ஒதுங்கி இவன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழச்சென்றால் போதுமே.

**********************************

Tuesday 17 October 2017

கிரிவலம் சென்றவர் மலையுச்சியில் இருந்து தவறி விழ என்ன காரணம்?

திருச்சி மாவட்டம், சஞ்சீவராயன் பெருமாள் கோவிலில் 2 அங்குலத்துக்கு குறைவாக விளிம்புகள் உள்ள சுவரில் கிரிவலம் வர முயன்ற நபர் தவறி விழுந்து மரணம் அடைந்ததற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? 
 dinamalar

தவறி விழுந்த நபருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா இல்லையா என்று நான் விவாதிக்கப்போவதில்லை.

ஆனால் அந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், குழந்தை இல்லை என்ற விஷயத்தால் இவ்வளவு ஆபத்தான நேர்த்திக்கடனை செலுத்த ஒரு நபர் துணிந்திருக்கிறார் என்றால் அந்த நபர் தன்னுடைய அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த சமுதாயத்தால் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கக்கூடும்?
பழங்காலத்தைப் போல் குழந்தை இல்லை என்றால் பெண்ணை கொளுத்தி விடுவது, விவாகரத்து செய்துவிடுவது, இரண்டாவது திருமணம் செய்வது போன்று கொடுஞ்செயல்கள் அவ்வளவாக நடைபெறுவதில்லை என்றாலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மன உளைச்சலை தரும் வேலையை சமுதாயம் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.

நான் ஒண்ணும் தப்பா சொல்லலை... அவங்க நல்லதுக்குதானே சொல்றேன்னு சொல்லிகிட்டே கடுமையா காயப்படுத்துற உறவினர்கள் மட்டுமின்றி நண்பர்கள், அக்கம்பத்தினரும் இருக்காங்க.

சரி...குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இந்த சமுதாயத்தால் ஏற்படக்கூடிய மன உளைச்சலை எவ்வாறு சமாளிப்பது?

வசதி வாய்ப்புகள் இருக்குறவங்க உரிய மருத்துவ சிகிச்சைக்கு செலவழிக்கட்டும். பல லட்ச ரூபாய் செலவழிக்க உங்க பொருளாதாரம் இடம் தரலையா?... எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க. உரிய சட்ட வழிமுறையை பயன்படுத்தி தத்து எடுத்துக்குங்க. உடல்நலக்கோளாறால குழந்தைப்பேறு அமையாத சூழ்நிலையில இப்படி தத்தெடுத்த பிறகு எத்தனையோ தம்பதிகள் சிறப்பு சிகிச்சை எதுவும் எடுக்காமலேயே அவங்களுக்கு குழந்தைகள் பிறந்திருக்கு. அதுக்கு காரணம், பெத்த பிள்ளையோ, தத்துப்பிள்ளையோ, நம்மளை அம்மா, அப்பான்னு கூப்பிட ஒரு குழந்தை இருக்குன்னுங்குற சந்தோஷத்துல அந்த தம்பதிகள் கவலை இல்லாம தாம்பத்தியத்துல ஈடுபட்டதுனால கூட அதன்பிறகு குழந்தைப்பிறப்பு சாத்தியமாகி இருக்கலாம்.

இன்னும் எதுவும் விசேஷம் இல்லையான்னு குழந்தை இல்லாத தம்பதிகளை கேட்டு அவங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குற வேலையை நாமும் செய்யாமல் இருப்பது நல்லது.

குழந்தைப்பேறுக்காக சிகிச்சை எடுத்துக்குறவங்களும், இவ்வளவு செலவழிக்கிறோமே... சிகிச்சை பலன் தருமா அப்படி இப்படின்னு மன சஞ்சலத்தை விட்டுட்டு, அந்த சிகிச்சைகளை சரியான மருத்துவமனைகள்ல உரிய மருத்துவர்களின் வழிகாட்டுதலோட எடுத்துக்குங்க.  பொதுவா மனித உடலுக்கு கேடு விளைவிக்கிற மது, புகை உள்ளிட்ட தீய பழக்கங்களையும், உணவு வகைகளையும் தவிர்த்துட்டு ஆரோக்கியம் தரக்கூடிய பால், தயிர், பழங்கள், கீரை உள்ளிட்ட எல்லாவகை உணவுகளையும் அதாவது சமச்சீர் உணவு வகைகள் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அதை சாப்பிட்டு வர்றதோட, நமக்கு குழந்தை பிறந்துடுச்சு... அடுத்த வருஷம் இந்த இடத்துக்கு அல்லது இந்த பண்டிகைக்கு நம்ம குழந்தையோட இந்த கோயிலுக்கு போறாம். இந்த ஊருக்கு சுற்றுலா போறோம் அப்படின்னு மன நம்பிக்கையோட இல்லற வாழ்க்கையை தொடருங்க. கண்டிப்பா நல்லது நடக்கும்.

அதை விடுத்து ஊர்மக்கள், உறவுகள் அதைப்பேசுமே, இதைப்பேசுமே என்று நினைத்து மனித உயிருக்கு, உடலுக்கு, மனதுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயல்களிலும் ஈடுபடாமல், உயிருக்கு ஆபத்தான வகையில் நேர்த்திக்கடன் அது இது என்று இறங்கி எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத உயிரைக் காப்பாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

Monday 16 October 2017

தீப ஒளி

தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது திருமலை வீதி. பாதி தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டிடங்கள். அதைத் தாண்டி ஆற்றின் கரையை நெருங்க நெருங்க சாலையின் இரு புறமும் குடிசைப் பகுதிகள். செங்கல்வர், மண்வர், கீற்றுத்தடுப்பு, ஏன் சுவரே இல்லாமல் கூரை மட்டும் உள்ள வீடுகளும் (?) உண்டு. இந்தியாவின் சமத்துவத்தை இதில் அறிந்து கொள்ளலாம்.



 மறுநாள் தீபாவளி. பலருடைய வீடுகளில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டதற்கு அடையாளமாக பட்டாசு ஒலிகள் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தன. அந்த இருந்த நேரத்தில் திருமலை வீதியில் மண்வர், மண்தரையால் ஆன ஒரு வீட்டில் இருட்டும் நேரத்தில் விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. உழைத்த களைப்பு நீங்க வேண்டும் என்று குடிபானம் அருந்தி வந்த முனியப்பன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அந்த வீட்டையே கலவரம் நடந்த கடைவீதியாக்கிவிட்டுப் போயிருந்தான்.
மயக்கம் தெளிந்த வளர்மதி மெள்ள கண்களைத் திறந்தாள்.

உடலில் எந்த பாகமும் மிச்சம் இல்லாமல் வலித்துக் கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். தரை முழுவதும் சோற்றுப் பருக்கைகள் சிதறிக் கிடக்க, பேராசிரியர் வீட்டில் இருந்து எடுத்து வந்த குழம்பு தரை முழுவதும் கொட்டி நாற்று நடத் தயாராக இருக்கும் வயல்போல் ஆகியிருந்தது. தீபாவளிக்காக என்று அவர்கள் கொடுத்திருந்த ஆடைகளும், பலகாரங்களும் முனியப்பனின் வன்முறையில் தப்பவில்லை.
நெற்றியில் வலி மிக அதிகமாகவே இருக்க, இடது கைவிரல்களால் லேசாகத் தடவிப் பார்த்தாள். எலுமிச்சைப்பழத்தின் ஒரு பாதியைக் கவிழ்த்து வைத்தது போல் வீங்கியிருந்தது. அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து நிலைப்படியில் மோதியும் ஆத்திரம் அடங்காத முனியப்பன், கீழே தள்ளி கண்ட இடத்திலும் மிதித்துவிட்டு வெளியேறியது நினைவுக்கு வரவும் அவள் கண்கள் மீண்டும் கலங்கின.

எதிர்ப்புறம் சுவரோரமாக ஒண்டியிருந்த மகனைப் பார்த்தாள். நான்கு வயதிருக்கும். தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த சண்டையைப் பார்த்து அழுது அழுது ஓய்ந்து விட்டிருந்தான் அவன்.

வளர்மதிக்கு அடிவாங்கியதால் முக வீக்கம். மகன் செந்திலுக்கு அழுததால் முகமெல்லாம் வீக்கம்.

தன் விதியை எண்ணி நொந்துகொண்டு தரையைச் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவி ஒழுங்குபடுத்தினாள்.

முனியப்பன் தினமும் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கி நூற்றுக்கணக்கில் சம்பாதித்தாலும், அவையெல்லாம் குடிப்பதற்கும், மூணு சீட்டு ஆட்டத்திற்கும் செலவு செய்யவே போதவில்லை என்று மிகவும் வருந்துவான். ஒரு சிறந்த இந்தியக் ‘குடி’ மகனின் கவலை வேறு எப்படி இருக்கும்?

ஒரு பேராசிரியரின் வீட்டில் வீட்டு வேலை செய்வதால் பட்டினி இல்லாமல் வயிறு தப்பிப் பிழைக்கிறது. பிள்ளை எந்தக் காலம் வளர்ந்து நம் கஷ்டத்தைத் தீர்க்கப் போகிறானோ என்று நொந்துபோய் இருந்தாள். மகன் செந்திலை ஏதாவது டீக்கடையில் கிளாஸ் கழுவ அனுப்பலாம் என்று கூட விசாரித்துப் பார்த்தாள். அதற்கு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளாவது போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

‘இப்போது வேறு குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது குற்றம் என்ற சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளதாக நிறையப்பேர் பேசிக்கொள்கிறார்களே... நம் பிள்ளையை வேலைக்கு அனுப்பும்போதும் அந்தச் சட்டம் இருக்குமா?... நம் கஷ்டம் அரசாங்கத்துக்கு எங்கே தெரியப்போகுது?...’ என்றெல்லாம் வளர்மதி சிந்தனை செய்தாள்.

‘இதையெல்லாம் சட்டம் போட்டு எதுவுமே செய்ய முடியாதுடி... எத்தனை கடையை தினமும் கண்காணிப்பாங்க... ஏதாவது முட்டுச் சந்துல ஒரு கடை இருக்காதா? அதுல ஒரு வேலை உன் புள்ளைக்கு இல்லாமலா போயிடும்?...’ என்று சில மேதாவிகள் வளர்மதிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

கணவனின் கொடுமையைவிட வேறு ஒரு கவலையும் சேர்ந்து கொண்டு அவளை வாட்டியது.

தஞ்சாவூரின் திருமலை சாலை சில நேரங்களில் மட்டும் கனரகப் போக்குவரத்துக்கு பயன்பட்டுவந்தது. அதை நிரந்தரமாக பிரதான சாலையாக்கி ஒருவழிப்பாதையாக அறிவிக்கப் போவதாக செய்திகள் உலவுகின்றன.

அப்படிச் செய்தால் சாலையின் இருபுறமும் உள்ள குடிசை வீடுகள்தான் முதல்பலி. காரணம், மற்ற இடத்தில் உள்ள சாலையின் அகலம் இருபத்தைந்து அடிளுக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த குடிசைப்பகுதிகளில் எட்டு அடிக்கும் குறைவான அகலம்தான் இருந்தது. பிறகு இடிக்காமல் என்ன செய்வார்கள்.

அப்படி ஒரு நிலை வந்து நடுத்தெருவில் நின்றால் வேறு இடத்தில் வாடகை வீடு பார்த்து அதற்கும் பணம் சம்பாதிக்க முடியுமா?...

அதெல்லாம் கிடக்கட்டும். மறுநாள் தீபாவளி. ஆனால் காலையில் எப்போதும் போல் தெருக் குழாயில் குடிநீருக்காக மற்ற பெண்களுடனே மல்யுத்தம் அளவில் சண்டை போடவாவது உடம்புல தெம்பு இருக்குமா?... பாவி மனுஷன் இப்படியா அடிப்பான்... என்று கலங்கி நின்றாள்.
வளர்மதி அவ்வப்போது வேதனையை சொல்லி அழ திருமலை வீதி பிரதான சாலையுடன் இணையும் இடத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குதான் செல்வது வழக்கம். இப்போதும் அங்கேதான் கிளம்பினாள். பிள்ளையுடன் சென்ற அவள் கோயிலுக்கு அருகில் இருந்த கடையில் கற்பூரம் வாங்கிக் கொண்டு ஆலயத்தினுள் நுழைந்தாள்.

அந்த ஆலயத்திற்கு இருபது நாட்களுக்கு முன்புதான் குடமுழுக்கு நடைபெற்றிருந்தது. அதன்பிறகு வளர்மதி இப்போதுதான் உள்ளே வருகிறாள். தரை முழுவதும் மார்பிள் கற்கள். சுவரிலும் ஐந்தடி உயரத்திற்கு சலவைக் கற்கள். புத்தம் புதிய வர்ணங்கள். அதன் மணம் இன்னும் வீசிக் கொண்டிருந்தது. சுவரெங்கும் நிறைய ஓவியங்கள்!
ஆலயம் கண்களுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது.

இன்று மாரியம்மன் எளிமையான ஒப்பனையில் இருந்தாள். குருக்கள் தீபாராதனை காட்டிவிட்டு வளர்மதி முன்னால் வந்து நின்றார்.
தட்டில் கற்பூரத்தை வைக்கப்போனாள்.

சூடம் ஏத்துறது இல்லம்மா... நெய்தீபம்தான்... தட்டுல சூடத்தை வெக்க வேணாம்மா...என்றார்.

இவள் தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு பிள்ளையின் கண்களுக்கும் ஒற்றினாள்.
விபூதியைக் கொடுத்துவிட்டு குருக்கள் உள்ளே சென்றார். இவள் பக்கத்தில் நின்ற பெண்ணிடம் தீப்பெட்டி வாங்கி கற்பூரத்தை ஏற்றினாள்.

அப்போது பிரகாரம் சுற்றி வந்த பெரியவர், ஏம்மா இப்பதான் புதுசா கல்லு போட்டுருக்காங்க... அதுல போய் சூடம் கொளுத்துற?... சுவாமி வாகனத்துக்குப் பக்கத்துல செங்கல் இருக்கே... அதுல ஏற்றி வெச்சா என்னம்மா?... இனிமே இந்த மாதிரி செய்யாதம்மா...என்றார்.

அணை உடைந்து நீர் வெளியேறுவதுபோன்ற வேகத்தில் கணவன் மீதிருந்த கோபத்தை அந்தப் பெரியவர் மேல் காட்டினாள்.

வளர்மதி, 'யோவ்... நான் சூடத்தை தரையிலதான கொளுத்துனேன். உன் தலையிலயா தீ வெச்சேன்... வீட்டுலதான் நிம்மதி இல்லை. இங்க வந்து பாரத்தை எறக்கி வெச்ட்டு போகலாம்னா முகம் தெரியாதவன்கிட்ட போயி பேச்வாங்க வேண்டியிருக்கு...என்று பொரிந்தாள்.

பெரியவர் திகைத்துப்போய் நிற்க, சத்தம் கேட்டு குருக்கள் வெளியே வந்தார்.
ஐயா... இதுங்களைத் திருத்தவே முடியாது. நீங்க ஏன் வாயைக் குடுத்துட்டு அசிங்கப்படுறீங்க... என்ற குருக்களின் குரலில் லேசான கோபம்.

கண்ணாடி மாதிரி இருந்த தரையைக் கறையாக்குனது நம்ம தப்புதான், அவர் பொறுமையாத்தான எடுத்துச் சொன்னாருன்னு கொஞ்சமாச்சும் புரியுதா பாருங்க... உங்க வயசைக் கூட மதிக்காம எடுத்தெறிஞ்சு பேது... செஞ்ச தப்பை உணராம இது இப்படி பேறதைப் பார்த்து வளர்ற இதோட பையன் நல்ல குணத்தோட நிச்சயமா வளர மாட்டான். யாரோட காலையாவது தெரியாம மிதிப்பான். அவர், ஏன் தம்பி பார்த்து போகக் கூடாதான்னு கேட்பார். உடனே இவன் யாரைப்பார்த்து என்னடா சொன்னேன்னு கேட்டு அவரை உதைப்பான்.

சமுதாயத்துல குற்றவாளிகள் அதிகமாகுறதுக்கு இந்த மாதிரி பெத்தவங்கதான் முக்கிய காரணம். நாம கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது? சேத்துல காலை வெச்சா நமக்குதான் அசிங்கம்...என்று குருக்கள் பேசி விட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
இப்போது வளர்மதி மனதில் சாட்டையடி.

குருக்களும், பெரியவரும் சற்று நகர்ந்து கிணற்றடியில் போய் உட்கார்ந்தார்கள்.
அந்தப் பெரியவர், சாமி, நீங்க சொல்றதும் சரிதான். இந்த அம்மாவைச் சொல்லித் தப்பு இல்லை. அவங்க அம்மா செஞ்சது மாதிரியே இதுவும் செஞ்சிருக்கும்.
இதைப் பார்க்குற அந்தப் பையனும் நாளைக்கு இதே மாதிரி இன்னொரு கோயில்ல போய் செய்வான். இப்படியே போனா எந்தப் புள்ளியில அவங்க திருந்துவாங்க?...என்று கவலையுடன் சொன்னார்.

அதற்கு குருக்கள், ஐயா... இந்தப் பொம்பளைக்கு தான் செஞ்சது தப்புன்னு தெரியலை. நீங்களும் தன்மையா எடுத்துச் சொன்னீங்க. அதைக் காது கொடுத்து கேட்டிருந்தா அந்தப் புள்ளைக்கும் நல்ல புத்தி வந்திருக்கும். நாளைக்கு அவனுக்கு ஒரு புள்ளை பிறந்தாலும் இந்த மாதிரி நல்ல பழக்கத்தை சொல்லி வளர்ப்பான். ம்...என்ன செய்ய?... இதெல்லாம் நம்ம சமுதாயத்தோட சாபக்கேடு...என்று பெருமூச்சு விட்டார்.

அப்போது அங்கே வந்த பேராசிரியரின் மனைவி லீலாவதி குருக்களிடம் என்ன ஐயா...ஏதோ பலமான விவாதம் போலிருக்கே...என்றாள். 

அவர்கள் நடந்ததை சொன்னார்கள்.

வளர்மதியைப் பார்த்த லீலாவதிக்கு வியப்பு. எங்க வீட்டுல வேலை செய்யுற பொண்ணுதான். நான் எடுத்து சொல்றேன். என்று குருக்களிடம் சொன்ன லீலாவதி, வளர்மதியை தனியே அழைத்துச் சென்றாள்.

ஏய்..வளர்மதி... நான் வந்தப்ப சரியா கவனிக்கலை. என்ன முகமெல்லாம்?... புருஷனோட திருவிளையாடலா. சரி இப்படி வா... என்று ஒரு ஓரமாக உட்கார்ந்த லீலாவதி, எதிரில் வளர்மதியையும் அமரச் செய்தாள்.

உன்னோட குணம் இது இல்லையே... என்ன பிரச்சனைன்னு சொல்லு. என்னால எதுவும் உதவ முடியுமான்னு பார்க்குறேன்... என்று மனம் நிறைய அக்கறையுடன் லீலாவதியிடமிருந்து வந்த கேள்வியே வளர்மதியின் மனபாரத்தைப் பாதியாகக் குறைத்துவிட்டது.

லேசான விம்பலுடன் கணவனின் மோசமான நடத்தையையும் கந்து வட்டிக்காரன் நெருக்குதலையும் கூறியவள், கண்களை துடைத்துக் கொண்டு, இன்னும் ரெண்டே வருஷம்... அப்புறம் என் புள்ளையை ஒரு வேலைக்கு அனுப்பிட்டா தீர்ந்தது கவலை... என்றாள்.

லீலாவதிக்கு பகீர் என்றது.

உங்க ரெண்டு பேர் மேலயுமே வழக்குப் போட்டு உள்ள தள்ளணும்.

என்னம்மா இப்படி சொல்றீங்க? 

ஆமாம்...குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழே உன் புருஷன்மேல ஒரு வழக்கு. குழந்தையை வேலைக்கு அனுப்புனா அதுக்கு உங்க ரெண்டுபேர் மேலயும் ஒரு வழக்கு போடணும்.

உடனே வளர்மதியின் கண்கள் கலங்கி விட்டன.

உங்களுக்கு என்னம்மா கவலை? ஐயா ஆயிரக்கணக்குல சம்பாதிக்கிறாரு.
எங்களை மாதிரி ஒரு வேளை சோறு கூட நிச்சயம் இல்லாம தினம் தினம் செத்துப்பிழைக்கிறவங்க போராட்டமெல்லாம் உங்களுக்கு எங்க புரியப்போகுது?

ஏய்... இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கண்ணைக் கசக்குற?
உன் புருஷன் பொறுப்பில்லாம இருக்குறதால, கந்துவட்டிப் பிரச்சனை, அன்றாட வாழ்க்கையை கவனிக்கத் தடுமாறி பிள்ளைக்கு எப்படா ஏழு வயசு ஆகும்... வேலைக்கு அனுப்பலாம்னு யோசிக்குற? உன் புருஷனும் இப்படி சின்ன வயலேயே கூலி வேலைக்குப் போனதால எல்லாக் கெட்டப் பழக்கமும் வந்து உன்னையைக் கொடுமைப் படுத்துறாரு. 

இப்ப உன் புள்ளையை ஏழு வயசுக்கே வேலை செய்து சம்பாதிக்க அனுப்புனா கையில நிறைய காசு புழங்கும். பிற்காலத்துல உன்னை மாதிரி ஒரு பெண்ணை அவனும் கொடுமைப் படுத்துவான். படிச்சவங்க எல்லாரும் ரொம்ப சரியா இருக்காங்கன்னு சொல்ல வரலை. நீ ஓரளவு படிச்சிருந்தாலே வெளியில வேலை செஞ்சு, உன் புருஷனை எதிரிபார்க்காமலேயே உன் புள்ளையை வளர்த்து ஆளாக்க முடியும்.

சுத்தமா படிக்காததால இப்ப வீட்டு வேலை செஞ்சு, வாழ்க்கைத்தேவையை பூர்த்தி பண்ணிக்க முடியாம தடுமாறிகிட்டே இருக்க. என்று லீலாவதி சொல்லவும் வளர்மதிக்கு பளிச்சென விளங்கியது.

தன்னுடைய துன்பத்திற்கு முக்கிய காரணம் கல்வியறிவின்மை. ஆனால் அதைப் பற்றி இப்போது யோசித்து என்ன செய்வது? 

அம்மா...இந்தக் கஷ்டத்துலேர்ந்து நான் மீளவே முடியாதா? 

இப்போது லீலாவதி முகத்தில் உற்சாகம்.

அப்படிக் கேளு. என் தம்பி வேலை செய்யுற கம்பெனியில கேண்டீன் இருக்கு. அதுல சமைக்க கைப் பக்குவம் உள்ள ஆள் தேவைன்னு சொல்லிகிட்டு இருந்தான். நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.

கந்துவட்டிக்காரன்கிட்ட எவ்வளவு குடுக்கணுமோ, அதை நான் தர்றேன். நீ மாசா மாசம் அசலை மட்டும் கொஞ்சமா திருப்பிக்கொடு. உன் புள்ளையை மட்டும் எக்காரணம் கொண்டும் வேலைக்கு அனுப்பிடாத. குறிப்பிட்ட வகுப்பு வரை இலவசக் கல்வி கிடைக்கும். அதுக்கு மேல எதுவும் உதவி தேவைன்னா நாங்க இருக்கோம்.

ஏன், கேண்டீன் வருமானத்துல நீயே உன் செலவுல புள்ளையைப் படிக்க வைக்கலாம்.
ஒருத்தர்கிட்ட யாசகம் கேட்க கூச்சப்படலாம்...ஆனா பிழைக்க வழி கேட்கவோ, படிக்க வழி கேட்கவோ கவலையே படக்கூடாது...இதை மட்டும் மனசுல வெச்க்க...என்று லீலாவதி முடித்தபோது குருக்கள், தீபாராதனைத் தட்டை எடுத்து வந்தார்.

அந்த தீப ஒளியிலே வளர்மதிக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயமில்லை என்ற நம்பிக்கை தெரிந்தது.
தஞ்சை பதிப்பு மாலைமுரசு தீபாவளிமலர் 2017ல் பிரசுரமானது.